Saturday, April 23, 2011

ஈஸ்டர் திருநாள்-


துன்பம் நீங்கி இன்பம் வந்த ஒரு நாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் 
ஈஸ்டர் திருநாள் 24 04 2011 அன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் மகிழ்ச்சியோடு 
கொண்டாடப்படுகின்றது.
அன்பையும்,கருணையையும் போதித்த இயேசு பெருமான்,தன் பகைவர்கள் 
தமக்கு இழைத்த கொடுமைகளையும் தாங்கி,வறிய மக்களுக்கும்,இயலாதவர்களுக்கும் 
கருணையுடனும்,அன்புடனும் தன் தேவனின் அருளுடன் பல காரியங்கள் செய்தார்.
பல அற்புதங்கள் செய்தார்.தமது பிரசங்கங்களினாலும்,செயல்பாடுகளினாலும் 
இந்த பூமிப் பந்திலுள்ள நலிந்த மக்களுக்கு உதவிட வேண்டுமென்ற உணர்வை தன்
சீடர்களுக்கும்,மற்றும் அனைவருக்கும் உபதேசம் செய்தார்.
"உங்கள் மேலங்கியை எடுத்துக்கொள்பவர்,உங்கள் எல்லா உடைகளையும் எடுத்துக்கொள்ள 
விரும்பினால் கொடுத்துவிடுங்கள்.உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள்.உங்களின் 
பொருட்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றை திருப்பிக் கேட்காதீர்கள்.
திருப்பக் கிடைக்குமென எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்"என்று போதித்தார்.
ஒருமுறை ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்,ஏசுநாதரை விருந்துக்கு அழைத்தபோது 
அவரிடம்,"நீர் விருந்துக்கு யாரையும் அழைக்கும்போது உமது உறவினர்களையோ,
நண்பர்களையோ,அண்டைவீட்டார்களையோ அழைக்க வேண்டாம்.பதிலாக 
ஏழைகளையும்,ஊனமுள்ளவர்களையும்,பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள்.
ஏனென்றால் இவர்கள் உமக்கு பிரதி விருந்து தர முடியாது.மற்றவர்கள் உமக்கு விருந்து 
வைப்பார்கள்.அது நீர் செய்ததற்கு பதிலாகிவிடுமே என்றார்."
ஏழை,எளிய,நலிந்த மக்களின் நலனுக்குக்காக பாடுபட்டு துன்பங்களை தாங்கிக் கொண்டு 
தொண்டு செய்திடும் மனப்பாங்கை சமுதாயத்தில் விதைத்தவர்.
மனித பாவங்களை சுமந்து சிலுவையிலே உயிர் விட்டு,மூன்று நாட்களின் பின்
உயிர்த்தெழுந்தவர்.இன்றும்,என்றும் பரிசுத்த ஆவியாக இருந்து அருள் புரிகின்றார்.
ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் அனைவரையும் எமது இணையத்தளம் 
வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment